Thursday, December 23, 2010

இந்திய உளவுத்துறையின் சூழ்ச்சிவலையை அறுத்தெறிவோம்

  பழைய உத்திகளை இவர்கள் கைவிடுவதாக இல்லை!
அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளால் நிலை தடுமாறிப் போயிருக்கும் காங்கிரசு மற்றும் தி.மு.க. கூட்டணிக்கு எதைத் தின்றால் பித்தம் தீரும் என்று அலைகிறார்கள்!
கார்கில் போராட்ட வீரர்களுக்கு ஒதுக்கிய வீடுகளை ஒதுக்கீடு செய்ததில் ஊழல், காமன்வெல்த் போட்டிகள் நடத்துவதில் ஊழல் செய்து உலக நாடுகள் முன்னால் தலைக்குனிவை ஏற்படுத்தியது அடுத்து! ஸ்பெக்ட்ரம் ஊழல் வரலாறு காணாத ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல்! கங்கை காவிரியை இணைக்க ஒரு லட்சம் கோடிதான் தேவைப்படும் என்றார்கள்! ராசாவும் மந்திரிகளும் ஏப்பம் விட்டது அதற்கும் மேலே!
வீட்டுமனைப் பட்டா ஒதுக்கீட்டில் கருணாநிதி செய்த அடுத்த ஊழல் அம்பலமானது! ராடியாவின் உரையாடல்கள் ஊடகத்தில் வந்தபோது இந்த நாட்டின் மக்களாட்சி என்பது எப்படி நாசமாகிக் கிடக்கிறது என்று அம்பலப்பட்டுவிட்டது! இப்படி நாறிப் புடை நாற்றமெடுக்கும் நிலையில், “இந்தச் சட்டமன்றத் தேர்தலும் வந்து தொலைக்கிறதே” என்று ஆட்சியாளர்களுக்கு குறிப்பாக தி.மு.க. காங்கிரசுக்குக் கவலையோ கவலை!
“மன்மோகன் சிங், சோனியா கோந்தி, கருணாநிதியை விடுதலைப்புலிகள் கொல்லச் சதி” என்று தலைப்பிட்டு ஊடகங்களை உசுப்பேத்தியது உளவுத்துறை! “சரி, யாரோயோ போட்டுத் தள்ளிவிட்டு புலிகள் மீது பழியைப் போடப் போகிறார்கள்! அந்தக் கையோட தமிழ்நாட்டில் எழுந்துவரும் தமிழின எழுச்சியின்மீதும் ஒரு ஏவுதல் படலத்தைத் தொடரலாம்” என்று போட்ட கணக்கை தமிழர்கள் சரியாகப் புரிந்து கொண்டு ஆப்பு வைத்துவிட்டார்கள்!
நினைவு இருக்கிறதா? விழுப்புரம் அருகில் தண்டவாளத்தில் குண்டு வைத்துத் தகர்த்து, அதன் அருகில் மடிப்பு கலையாத தாளைப் போட்டு, விசாரணைக்கு அதிகாரிகள் போகும் முன்னரே சென்னையிலுள்ள காவல் அதிகாரி இதில் மாவோயிஸ்டுகளுக்குத் தொடர்பு இல்லை என்று அறிக்கைவிட எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை என்கிற பாணியில் அசிங்கப்பட்டு அம்பலப்பட்டு போனது அவர்கள் காரியம்! தமிழ்த் தேசிய அமைப்புகளை ஒடுக்க இப்படி குண்டக்க மண்டக்க என்று பழைய பாணி அரசியலை புது அச்சு போட்டு உளவுத்துறை விற்கத்தான் பார்க்கிறது! ஆனால் தற்போது அது போணியாக மறுக்கிறது!
மன்மோகன்சிங், சோனியாகோந்தி, கருணாநிதி மீது விடுதலைப் புலிகள் மட்டும் அல்ல ஒட்டுமொத்தத் தமிழினமே கடும் சினம் கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிவர். அதை உளவுத்துறையும் இந்த செய்திப் பரப்பலின் வழியாக ஒத்துக் கொண்டிருக்கிறது மகிழ்ச்சிதான்! அதைத் திசைதிருப்பும் அவர்களது முயற்சி நமநமத்துப் போனவுடன் திரைக்கதை வசன கர்த்தாவை மாற்றி இப்போது புதுச் சரடு விடுகிறார்கள்.
“போர் உச்ச கட்டத்தை நெருங்கியபோது பயங்கர ஆயுதங்களுடன் புலிகளில் பலர் தப்பி விட்டனர் என்றும் அவர்களுக்கு தாவுத் இப்ராகிம் தொடர்பு இருப்பதாகவும், அவர் உதவியுடன் பொட்டுஅம்மான் உட்பட புலிகளில் பலர் தப்பி அயல்நாடுகளுக்குப் போனதாகவும், இறுதிக்கட்டப் போருக்குப் பின்னரும் பதுங்கியிருந்த புலிகள் தப்பித்துப் போய்விட்டனர் என்றும் புதுக் கதையும் புது முடிச்சும் போடுகிறார்கள்.
விடுதலைப்புலிகள் இருக்கிறார்களா? எங்கே இருக்கிறார்கள்? என்பது உலகமே வியந்து எதிர்நோக்கியிருக்கும் வினாக்கள் என்பதில் இரு கருத்துக்களுக்கு இடமில்லை! ஆனால், அந்தச் சந்தில் சிந்து பாட உளவுத்துறை புதுக்கதை புனைந்திருப்பதற்குக் காரணம் இல்லாமலா இருக்கும்?
1. இலங்கையின் இராசபக்சே அரசு போர்க்குற்றச்சாட்டு நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது!
2, இந்தியாவின் காங்கிரசு அரசு ஊழல் குற்றச்சாட்டு நெருக்கடியில் வெந்துகொண்டிருக்கிறது!

3. தமிழ்நாட்டின் தி.மு.க அரசு ஊழல் குற்றச்சாட்டு நெருக்கடியிலும் கருணாநிதி குடும்ப அரசியல் நெருக்கடியிலும் ஊசலாடுகிறது!
4. வெங்காயமும் விலைவாசி ஏற்றமும் மக்களைக் கடுப்பின் உச்சியில் வைத்திருக்கிறது! சரத்பவார், மிகச் சாவகாசமாக, “மூன்று வாரங்கள் கழித்துத்தான் விலை இறங்கும்” என்கிறார்.
5. விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தும் செய்திகள், ராடியா உரையாடல் பதிவுகள், மத்தியப் புலனாய்வுத் துறையின் திடீர் செயற்பாடுகள் போன்றன மக்கள் மனதில் தீவிரக் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது!
6. இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழரின் தனிநாட்டுக் போராட்டம் என்பது ஞாயமானதே என்று உலக நாடுகள்
உணரத் தொடங்கியிருக்கின்றன! தமிழ்நாட்டுக்குள் திராவிட இந்திய எதிர்ப்பு என்பது கால்கொள்ளத் தொடங்கிவிட்டது!
ஒரே கல்லில் இந்த ஆறு மாங்காய்களையும் அடிக்க உளவுத்துறை தலையைப் பிய்த்துக் கொள்கிறது! இத்தனைக் கிடுக்கிப் பிடியிலிருந்தும் இந்தக் கட்சிகளையும் தனிமாந்தர்களையும் விடுவிக்க வேண்டுமானால் மிகப் பயங்கரமான ஒரு கொலையையோ, குண்டுவெடிப்பையோ அல்லது மிகுந்த அதிர்ச்சியூட்டக்கூடிய நிகழ்வையோ நடத்தினால்தான் மக்களைத் திசை திருப்ப முடியும் என்பது இவர்களின் கணக்கு!
இனி பொது அறிவுக்கு சில எளிய வினாக்களைத் தொடுப்போம்!

ஒட்டு மொத்தத் தமிழினமும் விடுதலைப் புலிகளின் போராட்டக் காரணங்களை இன்று ஏற்று ஆதரிக்கிற நிலையில் புலிகள் வன்முறை வழியில் அதிரடி செய்து ஆதரவை இழக்க விரும்புவார்களா? அவ்வளவு அறிவு கெட்டவர்களா அவர்கள்?
இன்று உலக நாடுகள் பல விடுதலைப் புலிகளின் போராட்டத்தையும், தமிழரின் வாழ்வுரிமை, அவர்களின் தனியாட்சி உரிமை, தமிழருக்கு எதிரான சிங்களப் பேரினவாதம் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்து வருகிற சூழுலில் ஆயுத வழிப் பாதைக்குத் திடுதிப்பென்று திரும்புவார்களா?
சிங்கள இனவெறியர்களின் போர் வெறித் தாண்டவம் என்பது உலக வரலாற்றில் மிகப் பெரிய கொடூரமான மாந்த உரிமை மீறல் என்று உலகே இன்று அதிர்ந்து, புரிந்து வரும் நிலையில் விடுதலைப் புலிகள் அதைக் கெடுக்கும் விதமாக வன்முறைப் பாதையில் இறங்குவார்களா?
சிங்கள இந்திய திராவிடக் கூட்டு தமிழருக்கு எதிராக மாபெரும் தவறுகளையும் மிகப்பெரியப் போர்க்குற்றங்களையும் இழைத்துவிட்டு இன்று அதன் விளைவுகளை அறுக்கத் தொடங்கியிருக்கிறது! இதை புலிகள் கெடுக்க விரும்புவார்களா?
“அறத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்! அறமே வெல்லும்” என்பது முதியோர் வாக்கு!
உலகெங்கும் வாழும் தமிழர்கள் விழிப்படையவேண்டும்! உளவுத்துறையின் சூழ்ச்சி வலைகளை அறுத்தெரியுங்கள்! நம்மவர் நல்லவர் அனைவரிடமும் உண்மைகளைச் சொல்லி எச்சரித்து வையுங்கள்!

தமிழர்களம்

2 comments:

  1. நாதாரித்தனம் என்று தான் ஒழியுமோ...................

    ReplyDelete
  2. //ANKITHA VARMA சொன்னது…
    நாதாரித்தனம் என்று தான் ஒழியுமோ................... //

    விரைவில் ஒழிப்போம்.........

    ReplyDelete