Sunday, January 30, 2011

ஈழத்தின் தெருக்களில் நடப்பது தமிழக கரையோரங்களில் தொடர்கின்றது…! தமிழர்களே விழித்தெழுவோம்!!

சிறிலங்காவை மாறி மாறி ஆண்டுவரும் சிங்கள பேரினவாத அரசுகளின் பூரண ஒத்தாசையுடன் ஈழத்தின் தெருக்களில் நடைபெற்றுவரும் காணாமல்போதல் கடத்தல் சித்திரவதைக்குள்ளாதல் சுட்டுக்கொல்லப்படுதல் போன்ற சம்பவங்கள் எல்லை கடந்து தற்போது தமிழக கரையோரங்கள்வரை நீட்சிபெற்றிருப்பது திட்டமிட்ட இனஅழிப்பின் தொடர்ச்சியாகவே பார்க்கவேண்டும்.


1956ம் ஆண்டு சிறிலங்காவின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றவேண்டும் என்ற பிரதான நோக்கத்தோடு பண்டாரநாயக்காவால் வாக்குறுதியாக அறிவிக்ப்பட்ட சிறிலங்கா முழுமைக்கும் தனிச் சிங்களச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது முதல் இன்றுவரை தமிழர்கள் வகைதொகையின்றி கொன்று அழிக்கப்பட்டு வருகின்றனர்.

கைதுகள், காணாமல் போதல், கடத்தப்பட்டு பின் காணாமல் போதல், சுட்டுப் படுகொலை செய்தல் என பல்வேறு வடிவமெடுத்த தமிழின அழிப்பு நடவடிக்கைகள் தற்போது உச்சம்பெற்று எல்லைகடந்து தமிழக கரையோரங்களையும் தொட்டுநிற்கின்றது.

கடந்த 24மணிநேரத்தில்… கடந்த 48மணிநேரத்தில்… கடந்த சில நாட்களில்… கடந்த ஒரு வாரத்தில்… கடந்த ஒரு மாதத்தில்… என காலநிர்ணயம் செய்து கடத்தல்கள், காணாமல் போதல், கொலைச் சம்பவங்கள் தொடர்பான செய்திகள் தினசரி பத்திரிகைகளில் தொலைக்காட்சி வானொலி செய்திகளில் வெளிவருவது ஈழத்தில் வாடிக்கையாகிப் போய்விட்ட நிலையில் பாக்குநீரினை பகுதியில் சிங்களத்தால் தமிழக மீனவர்கள் வேட்டையாடப்படும் சம்பவங்கள் அதிகரித்துவருவதனால் தமிழக கரையோரங்களிலும் இத்தகைய நிலை ஏற்பட்டுவருவது திட்டமிட்ட தமிழின அழிப்பேயாகும்.

கடந்த 10 நாட்களில் இரண்டாவது மீனவர் சிறிலங்கா கடற்படையால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய தமிழக ஊடகங்கள் செய்திவாசித்துவருகின்றன. தற்போது தமிழகம் சட்டமன்ற தேர்தலை எதிர்நேக்கியிருக்கும் நிலையில் தமிழக மீனவர்களது படுகொலையும் வேகம்பிடித்துள்ளமை பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் இந்திய அளவிலும் தமிழக அளவிலும் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது.

வட இந்தியர்கள் புலம்பெயர் தேசங்களில் இன்னல்களை எதிர்கொள்ளும் போதெல்லாம் வட இந்திய ஊடகங்கள் ஆர்பரித்து பரபரப்பு செய்திகளை வெளியிட்டுவந்த போதும் 537 தமிழக மீனவர்கள் (செல்லப்பன் வரை) இதுவரை சிங்கள கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக எந்தவித செய்திகளையும் வெளியிடாமல் மௌணமாக இருந்தே வந்துள்ளன.

இதைவிட கொடுமை என்னவென்றால் ஏனைய மாநிலத்தவர்கள் தமது இனத்தவர் மதத்தவர் மொழிபேசுபவர்கள் என்ற ஒற்றுமையில் கடல்கடந்து பிளைப்பிற்காகவும் மேற்படிப்பிற்காகவும் சென்ற தமது உறவுகள் பாதிக்கப்படும் போது கூக்குரலிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி தேசிய சொத்துக்களிற்கு சேதம் விளைவிக்கும்வண்ணம் போராட்டங்களை நடத்துவதும் அதனை வட இந்திய ஊடகங்கள் பெரிதுபடுத்தி பரபரப்பை பற்றவைப்பதுமாக தமது இன மத மொழி உணர்வை வெளிக்காட்டிவரும் நிலையில் தாய்த் தமிழக ஊடகங்களும் அவற்றை விஞ்சும் வகையில் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டுவருவதுதான்.

ஆனால் திடீர் அக்கறையாக 538வது மீனவனாக சுட்டுக்கொல்லப்பட்ட போது இந்திய வரலாற்றில் முதல்முறையாக பாண்டியனிற்கு “இந்திய மீனவன்” என்ற கௌரவ நிலையினை வட இந்திய ஊடகங்கள் வழங்கியிருந்த அதிசயத்தை என்னவென்று சொல்லுவது.

வடஇந்திய ஊடகங்கள் எட்டடி பாய்ந்தால் சோனியாகாந்தியின் தலைமையில் செயற்பட்டுவரும் இந்திய நடுவன் அரசு பதினாறடி பாய்ந்து இந்திய-சிறிலங்கா வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவிற்கான சிறிலங்கா தூதுவரை நேரில் அழைத்து விளக்கம் கேட்டதுடன் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. (சம்பவம் தொடர்பாக விளக்கம் என்றால் : எப்படி சுட்டது..? சுடும் போது தமிழன் கதறித் துடித்தானா..? கெஞ்சிமன்றாடினானா..? அழுது புலம்பினானா..? கழுத்தில் கயிறு கட்டி இழுத்து கொல்லும் போது துடிதுடித்து செத்துப்போன எங்கள் உறவு செயக்குமாரின் இறுதி நிமிடங்கள் பற்றிய நேரடி வர்ணனையா..?) கண்டிப்பாக இதனைதானே சிறிலங்கா தூதரக அதிகாரிகள் பெற்றுக் கொடுக்கப் போகின்றார்கள். இவ்வாறு தமிழர்கள் உயிர்போகும் தறுவாயில் கதறித்துடித்ததைதானே சோனியா கும்பலும் கேட்டுரசிக்க துடிக்கின்றது. ஒருவேளை தேர்தல் தொகுதிப்பங்கீடு தொடர்பான பேரத்திற்காக டெல்லி பயணமாகும் கருணாநிதியும் இதனை கேட்டு மகிழமுடியும்.

எமது தொப்புள்கொடி உறவான பாண்டியனிற்கு இந்த அளப்பரிய கௌரவநிலை கிடைத்ததன் பின்னணி பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தி நிற்கின்றது.


1-இதுவரை நட்பு நாடாக இருந்த சிறிலங்கா நாடு இப்போது வேண்டாத நாடாகிவிட்டதா…?

2-இதுவரை பக்கதுணையாக இருந்து தமிழின அழிப்பிற்கு உதவியதற்கான பிரதிபலனாக எதிர்பார்த்த அளவிற்கு இந்தியாவிற்கு ராசபக்சே கைமாறு செய்யாததனால் ஏற்பட்ட கோபத்தாலா…?

3-ராசபக்சவுடன் சேர்ந்து தமிழர்களை ஈழத்தில் அழித்தொழித்த போது இரண்டு மணித்தியால உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றியும்.. ஈழத்தில் போர் நிறுத்தப்பட்டுவிட்டதாக அகில உலகமட்டத்தில் பொய்த் தகவல்களை பரப்பியும்.. கொட்டும் மழைபெய்த போதும் அடுத்த தினத்திற்கு ஒத்திப் போட்டு மனிதசங்கிலிப் போராட்டம் நடத்தியும்.. ஒப்பிற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை தமிழக சிறுத்தை உள்ளடங்கலாக சிறிலங்கா அனுப்பி வைத்தது.. என பல்வேறு நிலைகளில் தனது டெல்லி(சொக்கத்தங்கம் சோனியா) விசுவாசத்தை காட்டி தமிழகத்தை அமைதிப் பூங்காவாக வைத்திருந்த கருணாநிதி இப்போது வேண்டாத ஆளாகிவிட்டாரா…?

4-உலகமகா ஊழலை தலைமையேற்று நடத்தி முடித்து இப்போது மாட்டிக்கொண்டு தி.மு.க. முளிப்பதோடு தம்மையும் சேர்த்து குற்றவாளிகளாக நடு வீதியில் இழுத்துவிட்ட ஆத்திரத்தால் தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசிற்கு நெருக்கடியை கொடுத்து இந்தமுறை தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்துவதற்காகவா..?

5-தமிழக மீனவர் பிரச்சினையை தேசிய பிரச்சினையாக்கி தி.மு.காவிற்கு நெருக்கடியை உண்டுபண்ணி வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும் எண்ணிக்கையில் தொகுதிகளை பெறலாம் என்ற எண்ணத்திலா…?

இது போன்று பலவேறு சந்தேகங்கள் இதன் பின் ஒளிந்து கிடக்கின்ற நிலையில் இன்னும் தமிழகத்தை ஆளும் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு எவ்வித உடனடி நடவடிக்கையும் எடுக்காது வெறுமனே கடிதம் அல்லது தந்தியை அனுப்புவதோடு இருந்துவிடுகின்றமை வேதனையாக இருக்கின்றது.

இதில் எது காரணமாக இருந்தாலும் ஈழமண் தமிழகமண் இரண்டிலும் வாழும் தமிழர்களது உயிர் இவர்களது மாநில தேசிய சர்வதேச அரசியல் நலனிற்காக பறிக்கப்பட்டு வருவது மாத்திரம் வேதனையுடன் ஏற்றுக் கொள்ளவேண்டிய உண்மையாகும்.

தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொல்லப்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில் அதனை தடுத்துநிறுத்துவதற்கு உளப்பூர்வமாக தமிழக இந்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க நினைக்கவில்லை என்பதையே நடைபெறும் நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

உடனடியாக இந்தியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான இராசதந்திர தொடர்புகளை முறித்துக் கொண்டு இந்தியாவிற்கான சிறிலங்கா தூதுவரை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிடுவதுடன் சிறிலங்காவில் உள்ள இந்தியத் தூதுவரை உடனடியாக திரும்ப அழைத்து இராசதந்திர நெருக்கடி கொடுப்பதுதான் தனது நாட்டுப் பிரஜைகள் மீது அக்கறைப்படும் அரசு எடுக்கும் உடனடி நடவடிக்கையாகும்.

இந்திய அரசு தமிழர்கள் என்று ஓரவஞ்சனை காட்டிசெயற்பட்டால் தமிழக மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழக அரசாவது மத்திய அரசிற்கு இராசதந்திர நெருக்கடிகளை கொடுப்பதற்கு மத்திய அரசிற்கு அழுத்தங்களை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

மாறாக இந்திய அரசு ஒப்பிற்காக உதட்டளவில் கண்டனங்களை தெரிவித்துக் கொண்டிருப்பதும் எது எதுக்கோ டெல்லிக்கு சென்று முகாமிட்டு தங்கியிருந்து காரியம் சாதிக்கும் கருணாநிதி தமிழர்களது உயிர்பறிபோகும் அதிமுக்கிய விடயத்தில் தந்தியடித்துக் கொண்டும் கடிதம் எழுதிக் கொண்டும் அருகில் இருப்பவருக்கே கேட்காதவாறு முனகல் கண்டனங்களை வெளியிடுவதுமாக மத்திய மாநில அரசுகள் மெத்தனப் போக்கில் செயற்படுவதனாலே சிங்கள கடற்படை துணிச்சலாக தொடர்ந்து தமிழக மீனவ சொந்தங்களது உயிரை பறித்து வருகின்றது.

செயக்குமார் கழுத்தில் சுருக்கிட்டு சிங்கள கொலைவெறிப் படையால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்படுவதற்கு சில மணித்தியாலங்களிற்கு முன்னர் இந்தியாவின் தென் கிழக்கு கடற்பிராந்தியத்திற்கு பொறுப்பான கடற்படைத்தளபதி கருணாநிதியுடனான சந்திப்பில் இனிமேல் தமிழக கடற்பகுதியில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இடம்பெறாது என உறுதிமொழி வழங்கியிருந்த நிலையிலேயே இந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்திய தென்கிழக்கு கடற்பிராந்திய தளபதியின் உறுதி மொழியும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்சியின் கண்டனங்களும், இந்திய உள்துறை அமைச்சராக இருக்கும் வேட்டி கட்டிய தமிழரான சிதம்பரத்தின் எச்சரிக்கைகளும், தமிழக முதல்வர் கருணாநிதியின் தந்தியடிப்புகளும் கடிதத் தூதுகளும் தொடர் நிகழ்வுகளாக நடந்து கொண்டிருக்கும் போதே இன்னுமொரு தமிழக மீனவச் சகோதரன் சிங்கள கடற்படையால் படுகொலை செய்யப்பட்டிருப்பதானது மத்திய மாநில அரசுகளின் ஏனோதானோ என்ற வலுவற்ற எதிர்நடவடிக்கைகளை நிரூபித்து நிற்கின்றது.

தற்போது தமிழகத்தில் தேர்தல் காலம் என்பதால் இழப்பீட்டுத் தொகை 5இலட்சமாக அதிகரித்துள்ளதே தவிர சிங்களவர்களின் கொலைவெறியாட்டத்திற்கு உள்ளாகி பலியாகும் தமிழர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுதான் தமிழகத்து துயரமாக உள்ளது.

தமிழகத் தமிழர்களை ஆளும் கருணாநிதி கும்பலும் இந்தியாவை ஆளும் சோனியா கும்பலும் தமது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தினம்தினம் மரணத்தோடு போராடி மீன்பிடிக்கச் சென்று கரைதிரும்பும் எமது உறவுகளை பேராசைக்காரர்கள் என்று கூறிவருகையில் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்.

எமது மீனவச் சொந்தங்களை பேராசைக்கார் என்று கூறும் இவர்கள் பிளைப்பிற்காக எல்லைகள் கடந்து அரபு நாடுகளிலும் மேற்கத்தைய நாடுகளிலும் வாழ்ந்துவரும் தமிழரல்லாத இந்தியர்கள் தாக்கப்படும் போதோ அவமானப்படுத்தப்படும் போதோ அவர்கள் மீது ஏன் இந்த பேராசைக்காரர்கள் என்ற குற்றச்சாட்டை சுமத்துவதில்லை.

அவர்கள் மாத்திரம் என்ன கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர்கள் கோபாலபுரத்திற்குள்ளேயே இருந்து உழகை;கவேண்டியது தானே? எதற்காக உலகம் முழுமைக்கும் தமது ஆதிக்க கரங்களை படரவிட்டு தொழில்வளத்தை விரிவுபடுத்துகிறீர்கள். அது பேராசை இல்லையா…? அந்த பேராசையின் வெளிப்பாடாக கிடைத்த தொகையினை எல்லைகள் கடந்து சுவிசு வைப்பகத்தில் மறைத்து வைத்துள்ளதை என்னவென்று சொல்வது..?
இவர்களை வென்ற சோனியா குடும்பம் அரசியல் முன்னோடியான காந்தியடிகளது வழியைப் பின்பற்றி றாட்டையில் நூல் நூற்று உழகை;கவேண்டியதுதானே? எதற்காக போபர்சு பீரங்கி முதல் தற்போது இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல்வரை நேரடிபங்குதாரராக இருந்து கிடைத்த தொகையான பல்லாயிரம் கோடிகளை சுவிசு வைப்பகத்தில் மறைத்து வைத்தும் இலாபம் கொளிக்கும் முதலீடுகளாக பல்தேசிய தொழில் நிறுவனங்களில் வைத்துள்ளமையை பேராசை என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?

இருந்த இடத்தில் இருந்து ஆட்சி அதிகாரத்தினை பயன்படுத்தி திட்டங்களை அமுல்படுத்தி அதன் ஊடாக பல கோடிகளை பெற்றுவருபவர்களுக்கு அலைகடலுடன் போராடி தினமும் தமது வாழ்வாதாரத்தை நிலைநிறுத்த போராடும் எமது மீனவச் சொந்தங்களது மரணப் போராட்டத்தின் வலி எப்படித் தெரியப்போகின்றது?

வெறுமனே எல்லைதாண்டி வருகிறார்கள் என்ற ஒற்றைக்காரணத்திற்காக எமது சொந்தங்கள் சிங்களத்தால் வேட்டையாடப்படவுமில்லை! இந்தியாவை ஆளும் சோனியா கும்பலால் கைகழுவிவிடப்படவுமில்லை! தமிழரல்லாத தமிழுணர்வு அற்றுப்போன தமிழர் நலனைவிட தனது குடும்பத்தின் சுகபோகமே மேலானது என நினைக்கும் கருணாநிதி மக்கள் வரிப்பணத்தில் இருந்து 5இலட்சம் தொகையினை கொடுப்பதோடு தனது கடமையை முடித்துக் கொள்ளவுமில்லை! சாவதும் அடிபடுவதும் மிதிபடுவதும் அவமாணப்படுவதும் தமிழன் என்பதாலேயே ஆகும்.

இந்திய உள்ளிட்ட இருபதிற்கு மேற்பட்ட நாடுகளது ஆதரவுடன் ஈழத்தில் தமிழர்களை அழித்தொழித்த சிங்கள அரசு தனது கொலைக்கரத்தை பாக்குநீரினை கடந்து தமிழக கரையோரங்கள்மீது படரவிடுவது அங்கு இருப்பவர்களும் தமிழர்கள் என்ற காரணத்தால்தான். மகிந்த ராசபக்சவின் தமிழின அழிப்பில் இருந்து இந்த கருணாநிதி வம்சம் தமிழரல்லாத காரணத்தால் தப்பிவிடும் சூழ்நிலை இருப்பதால்தான் இந்த திட்டத்திற்கு ஒத்துழைத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த தமிழினமும் இருக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் கருணாநிதி சோனியா ராசபக்சே கூட்டணி செயற்பாட்டில் இருந்து வருவதன் வெளிப்பாடுதான் முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கப்பட்ட பல்லாயிரம் ஈழத்தமிழர்களைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த 539வது தமிழக மீனவனாக செயக்குமார் சிங்கள கடற்படையால் கொடூரமாக சித்திரவதை செய்து கொல்லப்பட்டுள்ளமை ஆகும்.

தொடர்ந்து தமிழக மீனவர்களை கொன்று சடலமாக சரித்துவிட்டு தமது வீரரர்கள் இதனை செய்யவில்லை என்று நா கூசாமல் மறுப்பறிக்கையினை சிங்கள அரசு வெளியிடுவதும் அதனை ஆமோதித்து இந்திய பிரதமர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் தமிழக தமிழர்களின் முதல்வரான கருணாநிதியும் தமிழகத்தில் இருக்கும் காங்கிரசு ஊனங்களும் அறிக்கைகள் வெளியிட்டு திசைதிருப்புவதும் வழக்கம் போல் நடைபெற்றுவருகின்றது.

அதனைவிட தமிழக மக்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்களாக இருப்பதைக் காட்டிலும் இந்தியனாக இருப்பதையே விரும்புகின்றனர். செல்லப்பன்(537..), பாண்டியன்(538..), செயக்குமார்(539..?) ஆகிய சொந்தங்கள் குறுகிய நாட்களில் சிங்களத்தால் கொல்லப்பட்டிருக்கும் இவ்வேளையில் இந்திய குடியரசு தினமான சனவரி-26 அன்று இந்திய தேசியக் கொடியை தமது நெஞ்சின் மீது குத்திக்கொண்டு பாரத மாதாவுக் வெற்றிக் கோசங்களை எழுப்பி இந்தியனாக பூரித்து நிற்பது இதனையே நிரூபித்து நிற்கின்றது.

தமிழக தமிழர்களை இந்திய தேசம் என்றுமே இந்திய குடிமகன்களாக ஏற்றுக் கொண்டு செயற்பட்டது கிடையாது. அதனை பல்வேறு விடையங்களில் தமிழக சகோதரர்கள் உணர்ந்திருப்பினும் இன்னும் இந்தியனாக இருக்கவே ஆசைப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாது. இந்திய குடிமகன் என்ற அடையாளம் தமிழர்களது உயிரை காப்பாற்ற உதவாதபோது எதற்காக அதனை கட்டிக்கொண்டு ஒப்பாரி வைக்க வேண்டும்.

தமிழர்களை மாற்றாந் தாய் மனப்பாண்மையுடன் கையாளும் சோனியா காந்தி தலைமையிலான இந்திய அரசிற்கு தமிழர்களது எதிர்ப்பினை அடையாளப்படுத்துமுகமாக இனி கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழர்கள் தமது படகுகளில் இருக்கும் இந்திய தேசியக் கொடியை அகற்றிவிட்டு செல்லவேண்டும். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சுயாட்சி கோரிக்கை விசுவரூபம் எடுத்து வருகையில் தமிழகத்தை ஆள்பவர்கள் தமது சுயலாபத்திற்காக இந்திய மத்திய அரசின் அடிமையாக இருந்து வருகையில் மானமுள்ள தமிழர்களாவது இந்திய அரசிற்கு எச்சரிக்கை விடும் வகையில் இந்திய தேசியக் கொடியை தூக்கியெறிய வேண்டும்.

தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்! நாங்கள் மாத்திரம் தான் மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் கட்சியின் பெயராலும் பிளவுபட்டு நாமே எமது அழிவிற்கான காரணமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஏனையவர்கள் பிளவுபட்டிருந்தாலும் இனம் மொழி என்ற குடைக்குக்கீழ் அணிவகுத்து தம்மை நாடிவரும் அழிவுகளில் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர்.

ஒரே ஒரு மலையாளி இந்திய மத்திய அரசில் இடம்பிடித்து இன்று சோனியாவின் சமையலறை முதல் இந்திய அமைச்சரவை வரை அங்கமாகி இந்திய மத்திய அரசையே ஆட்டிப்படைக்கும் அளவிற்கு பலம்மிக்கவர்களாக உருவாகியுள்ளமை அவர்களது இன மொழி உணர்வினாலேயே சாத்தியமாயிற்று. இதே போன்றுதான் மராட்டியர்களும் தெலுங்கர்களும் தமது ஒன்றுபட்ட பலத்தால் உரிமைகளை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நாம் தமிழர்களாக ஒன்றிணைவோம். தமிழர்கள் என்ற அடிப்படையில் அழிக்கப்படும் போது நாம் தமிழர்களாக ஒன்றிணைந்து எமது சுதந்திர வாழ்வை உறுதிசெய்வதில் என்ன தயக்கம் உள்ளது தமிழர்களே!? எமக்கான நாடாக தமிழீழத்தை மீட்டெடுத்து நிறைவான ஆட்சிதர தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் உள்ளார். நாம் சாதி,மத,கட்சி பேதங்களை தூக்கியெறிந்துவிட்டு தமிழர்களாக ஒரே குடையின்கீழ் ஒன்றிணைந்து பலம் மிக்கதொரு சக்தியாக உருவாகும் நாளில் நிட்சயமாக தலைவர் எம்மை வழிநடத்த விரைந்து வருவார்.

நாம் தமிழர்களாக ஒன்றிணைவதும் அதன் உடனடி பயணாக தமிழீழத்தை வென்றெடுப்பதற்கான இறுதிக்கட்ட போரிற்கு தயாராகிக் கொண்டிருக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது வெளிப்பாடு அமைவதுமே இந்த இழிநிலைக்கு தீர்வாக அமையும்.

ஆகவே தமிழர்களே உலகின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் நீங்கள் துன்பப்படும் போது ஓடோடிவந்து துன்பம் நீக்கி நல்வாழ்வு தந்திட சுதந்திர தமிழீழ அரசு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது தலைமையில் அமைவது அவசியமாகும்.

தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!!

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

ஈழதேசம் இணையத்தள ஆய்வாளர் : ம.செந்தமிழ்(28-01-2011)

No comments:

Post a Comment